Tuesday, January 20, 2009

இலவச அரிசி

---------------------
ஒவ்வோர் அரிசியிலும்
உண்பவர் பெயர் உண்டாம்
அரிசியில் இருந்து தொலையட்டும்
அதில் நெளியும்
புழுக்களிலுமா எழுதியிருக்கும்
உண்பவர் பெயர்.

------------------------------

Monday, November 10, 2008

இருப்பின் வலி

-----------------------------------
உறவுகளின் மரணங்களில் கூட
அழமுடியவில்லை
எங்கள் கண்ணீரையும்
ஒரு குற்றத்தைப்போல்
ஒளித்து வைக்கிறோம்

மானமே உயிரென்போர்
மண்ணில் பிறந்ததால்
எங்கள் கண்ணீரும்
கண்காணிக்கப்படுகிறது
புரட்சியின் ஆயுதமாக

புலம்பெயர்ந்தும்
இன்னும் பதுங்குகுழிக்குள்
அடையாளமின்றி புதைக்கப்படும்
எங்கள் உணர்வுகள்

உயிரோடிருப்பது
இவ்வளவு கடினமாக இருக்குமென்று
நான் நினைத்ததில்லை

உணர்வுகள் அடக்கி
உயிருக்காக மட்டும்
வாழும் இந்த வாழ்வு
சவப்பெட்டிக்குள் இருப்பதுபோல்
மூச்சுத் திணறுகிறது.

----------------------------------------

Saturday, November 1, 2008

தேடல்

----------------------
ஈழத்தில்
எங்கள் உறவுகளின்
புன்னகையை காணவில்லை
உங்கள்
தீபாவளி மத்தாப்புக்களில்
எதுவும் தெரிந்ததா?

----------------------------

Friday, October 24, 2008

கார்த்திகை பூ

-----------------------------
பதுங்கு குழிக்குள் வாழும்
என் தேசம்
புன்னகை சேமித்துவைக்கும்
உண்டியல்

----------------------------------

Saturday, October 18, 2008

அகதி முகாம்

-----------------------------
மரத்தைப் பிரிந்தும்
சிதறிக் கிடந்த
பூக்களின் அழகு

மிதித்து, கசக்கி
கூட்டிக் குவித்தீர்கள்
குப்பையாக.

-----------------------------------

அகதி வீடு


அடுப்புக்கு அருகில் அம்மா
பக்கத்தில் தம்பி
அடுத்து அப்பா
அப்பாவுக்குப் பக்கத்தில் நான்
எனக்கு கொஞ்சம் தள்ளி
புதிதாய் மணமான
என் அண்ணனும் அண்ணியும்
பத்துக்குப் பத்து வீட்டுக்குள்.

----------------------------------

Saturday, September 27, 2008

சதைகளில் இல்லை மானம்

-----------------------
ஆடைகள் இழந்த
என் உடலைத் தின்னும்
உங்கள் கண்களில்
எத்தனை பெருமை

உங்கள் சகோதரி என்றோ
மகள்போல் என்றோ
கால்களில் மண்டியிட்டு
உறவினை கலங்கம் செய்ய
எனக்குள் உணர்வில்லை

காணாமல்போன
எங்கள் சகோதரிகளின்
உயிரின் வலியை
மரணத்திற்கு பிறகும்
நான் உணர்கிறேன்.

காயங்களின் வழியே
உயிர் வடிந்த பிறகும்
என் சதைகளில்
தமிழர்களின்
மானம் தேடி அழைகின்றீர்

என் கண்ணீரால்
உங்கள் இயலாமையை
பெருமைப்படுத்தாத கோபம்
உங்கள் கொடூரத்தில்

எனக்குத் தெரியும்
என் கண்ணீர்தான்
உங்கள் உற்சாக பானம்
நான் அழவில்லை
சிதையும் வலியில்
கதறித் துடிக்கவில்லை
சலிப்படைகிறது
உங்கள் இயலாமை

எனக்கு பின்னும்
என் சகோதரிகள்
இங்கு இழுத்துவரப்படலாம்
மரணத்திற்கு பிறகும்
நீங்கள் மானம் தேடலாம்

எதிர்ப்பின்றி சிதையும்
எங்கள் மௌனத்தில்
குதூகலிக்காதே
நாங்கள் மீண்டும் பிறப்போம்
புரட்சியாய், ஆயுதமாய்
நரம்புகளில் துடிப்போடு


--------------------------------

Friday, September 26, 2008

சிறு துளி

----------------------------------
நான் ஏதிலியாய்
பயணம் செய்வதற்கு முன்பு
கடல் அழகாகவும் இருந்திருக்கலாம்.

---------------------------------------

அகதி வாழ்க்கை

---------------------------------
உணவுக்காக மட்டும்தான்
வாய் திறக்குமா
காகத்தின் கூட்டில்
குயில் குஞ்சு.

---------------------------------

Wednesday, September 24, 2008

அகதிகளின் இரவு

----------------------------
எங்கோ நடக்கும்
தவறுகளுக்காகவும்
எங்கள் முகாம்
சுற்றிவளைக்கப்படும்
நள்ளிரவில்
வீடுவீடாய் புகுந்து
தேடுதல்,
ஆள்தனிக்கை

அதிகாரிகளைப் பார்த்து
கோபமாய் குரைக்கும்
தெருநாய்கள்
நாங்கள் அமைதியாய்
கையில் அடையாள அட்டையுடன்.

-------------------------------

Tuesday, September 2, 2008

சிறுதுளி

--------------------------------
வானவில்லைப் பார்த்தும்
தலையை உள்இழுக்கிறது
பதுங்குகுழியில் வாழும் குழந்தை.

-----------------------------------------

Saturday, August 2, 2008

சமாதானம்

-----------------------------
வெள்ளைப் புறாக்கள்
உயர்ந்த கோபுரங்களில்
கூடுகட்டும் .....
பதுங்குகுளிக்குள்
பாடம் படிக்கிறது குழந்தை

-----------------------------------